011. இயேசு எல்லோரையும் நேசித்தால் ஒரே நேரத்தில் எல்லோரையும் இரட்சிக்கலாமே !

     இரட்சிக்கலாம். ஆனால், அப்படி செய்தால் அது ‘மன’ மாற்றமாக இருக்காது; ‘மத’ மாற்றமாகத்தான் இருக்கும். மனிதன் முழுமனதோடு இயேசுவை ஏற்றுக்கொண்டு, எந்த கட்டாயமும் இல்லாமல், முழுவிருப்பத்தோடு அவரைப் பின்பற்ற வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். நாம் விரும்பாத ஒரு கொள்கையை ‘தலைவிதி’ என்று கடைபிடிப்பதை கடவுள் விரும்பவில்லை. கடவுள் மனிதனை ஒரு இயந்திரமாக படைக்கவில்லை. அவனை தன்னுடைய சாயலாக படைத்ததால் கடவுளுக்கு அவர் விரும்பியதை செய்யும் உரிமை உள்ளதுபோல், மனிதனுக்கும் அவன் விரும்பியதை செய்யும் உரிமையளித்தார். கடவுள் மனிதனை ஒரு மிருகமாகவோ, பறவையாகவோ படைக்கவில்லை. மிருகங்களுக்கு அதிகபட்சமாக ஐந்து அறிவுகளைக் கொடுத்தார். ஆனால், மனிதனுக்கு ஆறாம் அறிவு என்னும் பகுத்தறிவையும் கொடுத்தார். அந்த ஆறாவது அறிவை தீர்மானம் செய்ய கொடுத்தார். கடவுளை பின்பற்றுவதும் பின்பற்றாததும் மனிதனுடைய விருப்பமே. அந்த உரிமையில் கடவுள் தலையிட்டு அவனுடைய சுதந்திரத்திற்கு ஊறுவிளைவிக்க மாட்டார். யாரையும் கட்டாயப்படுத்தி தன் கொள்கையைத் திணிக்கமாட்டார். இதோ, நான் கதவருகில் நின்று தட்டிக் கொண்டிருக்கிறேன். யாராவது என் குரலைக்கேட்டு கதவை திறந்தால், நான் உள்ளே சென்று அவர்களோடு உணவு உண்பேன் அவர்களும் என்னோடு உணவு உண்பார்கள் (தி.வெ.3:20) என்று இயேசு கூறினார்.

     ஆனால், கடவுளை அறியாமல், அவரை நம்பாமல், தான்தோன்றித் தனமாக நடக்கும் எவரையும் சாத்தான் விட்டுவைக்க மாட்டான். நாம் என்ன செய்ய வேண்டுமென்று நினைக்கிறோமோ அதை செய்யவிடாமல் தடைசெய்வான். மனிதன் நிம்மதியாக வாழ்வதற்கு என்னென்ன தடைகளை உருவாக்க முடியுமோ எல்லா சதிவேலைகளையும் அவன் செய்வான். ஆனால், ஞானமாக இயேசுவை பற்றிக்கொண்டால் நிம்மதியாக வாழலாம். அதனால்தான் இயேசு, “பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே எல்லோரும் என்னிடம் வாருங்கள் நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்” (மத்.11:28) என்று எல்லோரையும் அழைக்கிறார்.

இயேசு இந்தியாவுக்கு வந்து, இந்துமதக் குருக்களிடம் கற்றுத்தான் இஸ்ரவேலில் ஆன்மீகப்பணி செய்தார் என்பது உண்மைய அல்லவா ?