025. நீங்கள் மரியா, அந்தோணியார், சவேரியார் என்று பலரை வணங்குவது போல, நாங்களும் பல தெய்வங்களை வணங்குவதில் தவறென்ன ?

     (தந்தை, மகன், தூய ஆவியாராகிய திரித்துவ) தெய்வத்தை தவிர வேறு யாரையும் கடவுளாக வணங்கக்கூடாது என்பது வேத உபதேசம். “உன் கடவுளாகிய ஆண்டவரை வணங்கி, அவர் ஒருவருக்கே பணி செய்” என்று மறைநூலில் எழுதப்பட்டுள்ளது (மத். 4:10). கிறிஸ்தவர்களில் சிலர் இயேசுவின் தாயாகிய மரியாள், வானதூதர்கள், மற்றும் இறந்த புனிதர்களிடமும் வேண்டுதல் செய்கிறார்கள். ஆனால் இது வேதசட்டப்படி தவறு. மரியா, தன் மூலமாகத் தான் கடவுளிடம் போகவேண்டும் என்று கூறியதாக வேதத்தில் எந்த ஆதாரமுமில்லை. கடவுள் ஒருவரே; கடவுளுக்கும் மனிதருக்குமிடையே இணைப்பாளரும் ஒருவரே; அவரே மனிதவடிவில் வந்த இயேசுகிறிஸ்து (1திமொ. 2:5). கடவுளையும் மனிதனையும் இணைக்க தன் உயிரையே கொடுத்த இயேசுவின் அன்புக்கு அருகில் எவரையும் வைக்கமுடியாது. இயேசு இந்த உலக மக்களுக்காக இறப்பதற்குமுன், தாய் என்ற முறையில் மரியாவிடம் போய், தாயே இவ்வுலக மக்களை மீட்க என் உயிர் தேவைப்படுகிறது நான் அவர்களுக்காக இறக்க அனுமதி கொடுப்பீர்களா?’ என்று கேட்டால் பெற்ற வயிறு சம்மதிக்குமா? எந்த தாயும் தான் பெற்ற குழந்தை தன் கண்ணெதிரே அடித்து கொல்லப்படுவதை சகிக்கமாட்டாள். ஆக, நரகக் குழியில் நாம் விழக்கூடாது என்று நினைத்து, நாம் அடைய வேண்டிய தண்டனையை அவர் ஏற்றுக்கொண்டாரே! அந்த கருணாமூர்த்தியிடம் நாம் ஏன் நேரடியாக பிரார்த்திக்க கூடாது? நமக்காக உயிரையே கொடுக்குமளவுக்கு நம்மீது பாசம் வைத்திருக்கும் அந்த கருணைப்பிரபுவிடம் நாம் ஏன் நேரடியாக பேசக்கூடாது? கொஞ்சம் யோசியுங்கள்.

     ஒருசில கிறிஸ்தவர்கள், மரியா பாவமே இல்லாமல் பிறந்து, வாழ்ந்தவர் என்று கூறுகிறார்கள். ஆனால், மரியா தன்னைப்பற்றி தானே கூறுவதை கவனியுங்கள். ஆண்டவரை என் உள்ளம் போற்றிப் பெருமைப்படுத்துகிறது. என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கிறது” (லூக். 1:47). என் ‘மீட்பராம் கடவுள்’ என்று மரியா கூறுவதிலிருந்து மரியாவுக்கு மீட்பர் தேவை என்று புரிகிறது. பாவிக்குத்தான் மீட்பர் தேவை. மரியா தன் நிலையை வெளிப்படையாக கூறுகிறார். சிலர் மரியாவுக்கு இயேசுவைத் தவிர வேறு பிள்ளைகளேயில்லை என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர். வேதம் கூறுவதை தெளிவாக கவனியுங்கள். இவர் தச்சரல்லவா? மரியாவின் மகன்தானே. யாக்கோபு, யோசே, யூதா, சீமோன் ஆகியோர் இவருடைய சகோதரரல்லவா? இவர் சகோதரிகள் இங்கு நம்மோடிருக்கிறார்கள் அல்லவா? (மாற்.6:3) என்று இயேசு மனித வடிவில் வாழ்ந்த நாட்களில் அவரோடு வாழ்ந்தவர்கள் கூறினார்கள். மேற்கண்ட வசனத்திலிருந்து, இயேசு பிறந்தபின் மரியாவுக்கு பிள்ளைகளுண்டு என்று அறிகிறோம்.

     கிறிஸ்து மக்களுக்கு பிரசங்கம் பண்ணும்போது, “பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே. நீங்கள் எல்லாரும் என்னிடம் வாருங்கள் உங்களுக்கு இளைப்பாறுதல் தருகிறேன்” (மத். 11:28) என்று கூறினார். தன் தாய் மூலமாகவோ, செத்துபோன புனிதர்கள் மூலமாகவோ, அல்லது வானதூதர்கள் மூலமாகவோ மன்றாடக் கூறவில்லை. பேதுரு என்னும் திருத்தூதர் கொர்நெலியுவின் வீட்டிற்கு வந்தபோது, கொர்நெலியு அவரை எதிர்கொண்டு போய் அவர்; காலில் விழுந்து வணங்கினார். பேதுரு,‘எழுந்திடும், நானும் ஒரு மனிதன்தான்’ என்று கூறி அவரை எழுப்பினார் (தி.பணி. 10:25,26). கால் ஊனமுற்ற ஒருவருக்காக பவுலும் பர்னபாவும் சேர்ந்து பிரார்த்தனை செய்தபோது, அவர் முழுமையாக குணமடைந்தார். உடனே அங்கிருந்த மக்கள், “தெய்வங்கள் மனித உருவில் நம்மிடம் இறங்கி வந்திருக்கின்றன” என்றனர். உடனே பவுலும் பர்னபாவும், “மனிதர்களே, ஏன் இவ்வாறு செய்கிறீர்கள்? நாங்களும் உங்களைப் போன்ற மனிதர்கள்தாம் நீங்கள் இந்த பயனற்ற பொருட்களை விட்டுவிட்டு, விண்ணையும் மண்ணையும் கடலையும் அவற்றிலுள்ள அனைத்தையும் உண்டாக்கிய வாழும் கடவுளிடம் திரும்புங்கள் என்ற நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறோம்” என்றனர் (தி.பணி. 14:8-15). வானதூதர்களை வணங்குவதை தவறென்று வேதம் எச்சரிக்கிறது (கொலோ. 2:19). யோவான் என்னும் திருத்தூதரை கடவுள் மோட்சத்தைச் சுற்றிக் காண்பிக்கக் கொண்டு சென்றார். யோவான் பல கண்கொள்ளாக் காட்சிகளைக் கண்டு வியந்து போனார். கடவுளால் நியமிக்கப்பட்ட ஒரு வானதூதர்தான் இவை எல்லாவற்றையும் அவருக்கு காண்பித்தார். அதைப்பற்றி அவரே எழுதுகிறார்.

     யோவானாகிய நானே இவற்றை எல்லாம் கண்டேன் கேட்டேன். அப்போது இவற்றை எனக்குக் காட்டிய வானதூதரை வணங்கும் பொருட்டு அவருடைய காலடியில் விழுந்தேன். அவரோ என்னிடம், “வேண்டாம் உனக்கும் இறைவாக்கினர்களான உன் சகோதர சகோதரிகளுக்கும் இந்நூலிலுள்ள வாக்குகளை கடைபிடிப்போருக்கும் நான் உடன் பணியாளனே. கடவுளை மட்டுமே நீ வணங்கவேண்டும்” என்றார் (தி.வெ. 22:8,9). இங்கே யோவானுடைய மனஐயங்கள் தெளிவடைகின்றன. கடவுளை மட்டுமே வணங்க கற்றுக் கொண்டார்.

நீங்கள் அமெரிக்காவிலிருந்து பணம் வாங்குகிறீர்கள் !