057. இயேசுவை ஏற்றுக்கொண்டால் எங்கள் தெய்வங்களிடமிருந்து தொந்தரவு வராதா ?

இயேசுவை ஏற்றுக்கொண்டால் எங்கள் தெய்வங்களிடமிருந்து தொந்தரவு வராதா ?

‘உங்கள் தெய்வம், எங்கள் தெய்வம்’ என்று பல தெய்வங்கள் கிடையாது. இந்துக் கடவுள்;, கிறிஸ்தவக் கடவுள், இஸ்லாமியக் கடவுள், தமிழ்க் கடவுள், மலையாளக் கடவுள், தெலுங்குக் கடவுள் என்று பல கடவுள்கள் இல்லை. கடவுள் ஒருவரே உண்மை தெய்வம் ஒருவரே அவரை தெய்வமாக வணங்கும் எல்லாருக்கும் கடவுள் சிறப்புப் பாதுகாப்பு அளிக்கிறார். இயேசு கிறிஸ்து உங்களுக்குள் வரும்போது உங்களது உயிரும் அவரது உயிரும் ஒன்றாக இணைந்து விடுகிறது (1கொரி. 6:17). பயப்படாதீர்கள் நீங்கள் இயேசுவின் இரத்தத்தால் கழுவப்பட்டீர்கள். இனி மேல் எந்த துஷ்ட ஆவிகளுக்கும் உங்கள் மீது அதிகாரம் இல்லை. நீங்கள் கொஞ்சமும் சந்தேகப்படப் வேண்டாம். உங்களுக்கு விரோதமாக எழும்பும் எந்த தீய சக்திகளும் உங்களைத் தாக்காது. உன்னைத் தாக்குமாறு (பிசாசினால்) உருவாக்கப்பட்ட எந்த போர்க்கருவியும் நிலைத்திராது (ஏசா:54:17) என்று வேதம் உறுதியாக கூறுகிறது. நம்பிக்கையோடிருங்கள். உங்கள் இறைநம்பிக்கையே உலகிலுள்ள அனைத்து சாத்தானிய வல்லமைகளையும் வெல்லும் (1யோவா. 5:4). ஆன்மீகமாக பிசாசை எதிர்க்கும் சக்தியுடைய ராஜாவாக நீங்கள் மாறியிருக்கிறீர்கள் (தி.வெ. 1:6).
இயேசு கிறிஸ்து உங்களை விட்டு விலகுவதுமில்லை, உங்களை கைவிடுவதும் இல்லை (யோசு. 1:5). உங்களுக்கு விரோதமாக யாராவது மந்திரம், பில்லிசூனியம் செய்தாலும் அது உங்களைப் பாதிக்காது (எண். 23:33). உங்கள் உடல் இறைவன் குடியிருக்கும் ஆலயம் (1கொரி. 3:16). உங்கள் உடல், பொருள், ஆவி அனைத்தும் பரமாத்மாவின் பாதுகாப்பு வளையத்துக்குள் வந்துவிட்டன. கடவுள் தன் வானதூதர்களை வைத்து உங்களைப் பாதுகாக்கிறார் (எபி.1:13,14) என்று பைபிள் சுட்டிக்காட்டுகிறது. நீங்கள்தான் இந்த உலகிலேயே முதலாவது இயேசுவை ஏற்றுக் கொள்ளும் நபர் அல்ல. இந்திய மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 20% மக்கள் இயேசுவை ஏற்றுக்கொண்டு பின்தொடர்கிறார்கள். அவர்களும் வாழவில்லையா? இயேசுவோடு இணைந்து வாழ்பவர்களை பிசாசு தொடமுடியாது. எந்த வேளையில் பிசாசு உங்களை சோதிக்க வந்தாலும் இயேசுவின் நாமத்தில் நம்பிக்கை வைத்து அவனுக்கு எதிர்த்து நில்லுங்கள். அவன் உங்களை விட்டு ஓடிப்போவான் (யாக். 4:7) என்றுவேதம் வழிகாட்டுகிறது. எத்தனையோ அர்ச்சகர்கள், குருசாமிகள், சாஸ்திரிகள், மந்திரவாதிகள் இயேசுவை ஏற்றுக் கொண்டு நலமுடன் வாழ்கிறார்கள். மந்திரவாதிகளுக்கு சக்கரவர்த்தியாயிருந்த ‘தொட்டண்ணா’ என்னும் மந்திரவாதி மனம் திரும்பி ஊழியம் செய்யவில்லையா?
உங்களுக்காக உங்கள் கிறிஸ்தவ நண்பர்கள் நிச்சயம் பிரார்த்தனை செய்வார்கள். அந்த கூட்டுப் பிரார்த்தனைகளுக்கு பலனில்லாமல் போய்விடுமா? பிசாசு தங்கியிருக்கும் வீட்டில் நீங்கள் தங்கியிருந்தாலும், இயேசு உங்களுக்குள் இருப்பதுவரை உங்களை எதுவும் அணுகமுடியாது. நீங்கள் இயேசுவோடு கூட சிங்காசனத்தில் ஆன்மீக அதிகாரத்தோடு அமர்ந்திருக்கிறீர்கள். பிசாசும் அவன் படைகளும் எத்தனை திரளாய் வந்தாலும், அந்த வல்லமைகள் எல்லாவற்றையும் மேற்கொள்ளும் சக்தி உங்களுக்கு உண்டு. நீங்கள் கஷ்டப்பட்டால் ‘பூர்வஜென்ம பாவம்’ என்று அவ்வாள் கிண்டல், நையாண்டி செய்வது போல் கிறிஸ்துவை உடைய கிறிஸ்தவர்கள் கூறமாட்டார்கள். மாறாக முழுமனதோடு உங்களுக்காக இறைவனிடம் வேண்டுதல் செய்வார்கள்.

எல்லா ஆறுகளும் ஒரே கடலில் சேர்கின்றன. எல்லா கடவுள்களும் ஒன்றுதான் !