059. கிறிஸ்துவை வணங்காமலேயே பலர் நன்றாக இருக்கிறார்களே ?

கிறிஸ்துவை வணங்காமலேயே பலர் நன்றாக இருக்கிறார்களே ?

இயேசுவை தன் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்வது இந்த மண்ணுலக வாழ்விற்காக மட்டுமல்ல மரணத்திற்கு பின்வரும் நித்திய வாழ்க்கைக்காகவும் தான். கடவுள் நம்பிக்கையே இல்லாதவர்களுக்கும் உணவூட்டி, உடை, உறைவிடம் கொடுப்பதும் கடவுள்தான். அவ்வளவு தூரம் கடவுள் இரக்கமும், தயவும், அன்பும் உள்ளவர்.
ஒரு தகப்பனுக்கு நல்லவன், கெட்டவன் என்று இரண்டு மகன்கள் இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். தான் பெற்ற நல்ல மகனுக்கு கொடுக்கும் உணவை, கெட்ட மகனுக்கும் கொடுப்பார். மனிதனுடைய மனதினில் அவ்வளவு அன்பிருக்குமானால் அதைவிட எவ்வளவு அதிகமாக இறைவன் அன்புக்காட்டுவார். இயேசு கூறினார், “உங்கள் பகைவரிடமும் அன்புகாட்டுங்கள். உங்களைத் துன்புறுத்து வோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள். இப்படி செய்தால், நீங்கள் உங்கள் விண்ணகத் தந்தையின் மக்கள் ஆவீர்கள். ஏனெனில், அவர் நல்லோர்மீதும் தீயோர்மீதும் தம் கதிரவனை உதித்தெழச் செய்கிறார். நேர்மையுள்ளோர் மேலும், நேர்மையற்றோர் மேலும் மழை பெய்யச் செய்கிறார்” (மத்.5:44,45).
ஆண்டவர் எல்லாருக்கும் நன்மை செய்பவர் தாம் உண்டாக்கிய அனைத்தின்மீதும் இரக்கம் காட்டுபவர் தடுக்கி விழும் யாவரையும் ஆண்டவர் தாங்குகின்றார். தாழ்த்தப்பட்ட யாவரையும் தூக்கி விடுகின்றார். எல்லா உயிரினங்களின் கண்களும் உம்மையே நோக்குகின்றன தக்க வேளையில் நீரே அவற்றிற்கு உணவளிக்கின்றீர். (தி.பா. 145:9,14,15). நல்லவர்களை மட்டும் காப்பாற்றிவிட்டு, தீயோரை அழிப்பதற்காக கடவுள் மனித உருவில் வரவில்லை. தீயோரைத் தன் அன்பின் வலிமையால் நல்லோராக மாற்றவே அந்தக் கருணாமூர்த்தி மனிதனாய் அவதரித்தார். சிலுவையில் தன்னை அறைந்தவர்கள், தாங்கள் செய்தது இன்னதென்று அறியாமல் செய்ததால் அவர்களுக்கு மன்னிப்பு அருளும்படி பரமபிதாவிடம் மன்றாடினார். இயேசுவை இரட்சகராக கண்டடையாத ஏராளமான மக்கள் வேண்டுமென்றே இயேசுவை புறக்கணிக்கவில்லை. அவரை புரிந்துகொள்ளாமல் புறக்கணிக்கிறார்கள்.
ஓர் இந்துசகோதரர், தான் வணங்கும் விக்கிரகங்களுக்கு முன் நின்று வணங்கினாலும் அவைகளை உண்மையான கடவுள் என்று எண்ணியே தொழுகிறார். கடவுள் இந்துக்களுடைய உள்ளத்தைப் பார்க்கிறார். இயேசு மட்டும் தான் கடவுளோடு மக்களை இணைக்கும் ஒரே பாலம் என்னும் உயர்ந்த உண்மையை ஏற்றுக்கொள்வது எல்லா மக்களுக்கும் எளிமையானதல்ல. ஏனென்றால், ஆதியில் உலக நாதனாய் இருந்த ஆதாமை சாத்தான் ஏமாற்றி, ஆதாமிடமிருந்த உலகளாவிய அதிகாரத்தை தன் வயப்படுத்தி அபகரித்து கொண்டான். அவனுக்கு இப்பிரஞ்சத்தின் தெய்வம் என்றொரு பெயருமுண்டு (2கொரி. 4:4). அவன் ஆதாம் தொடங்கி எல்லா மக்களின் அறிவுக் கண்களையும் குருடாக்கி ஆதிமுதல் ஏமாற்றிக்கொண்டிருக்கிறான்.
சாத்தான் ஒருமுறை இயேசுவுக்கு உலகத்தின் அரசுகள் அனைத்தையும் ஒரு நொடிப்பொழுதில் காட்டி அவரிடம், “இவற்றின் மேல் முழு அதிகாரத்தையும், இவற்றின் மேன்மையையும் உமக்குக் கொடுப்பேன். இவையாவும் என்னிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன. நான் விரும்பியவருக்கு இவற்றை கொடுப்பேன். நீர் என்னை வணங்கினால் அனைத்தும் உம்முடையதாகும்” என்றான். இப்படி அவன் கேட்ட கேள்விக்கு பதிலாக இயேசு, உன் கடவுளாகிய ஆண்டவரை வணங்கி, அவர் ஒருவருக்கே பணி செய்வாயாக என்று மறைநூலில் எழுதியுள்ளது என்றார் (லூக்.4:5-8).
சாத்தான் அந்த சோதனை கேள்வியை இயேசுவிடம் கேட்டதால் அப்படி ஒரு ஞானமான பதிலை சொன்னார். ஆனால், மண்ணாசையுடைய ஒருவரிடம் அப்படிப்பட்ட கேள்வியை கேட்டால் நிச்சயமாக அவர் சாத்தானை வணங்கிவிடுவார். உலகமே அவரிடம் வந்துவிடும். ஆனால், சாத்தானுக்கு பூரண அடிமையாகிவிடுவார். எம்மதத்து மக்களானாலும், நாத்திகரானாலும் அவர்கள் மீது பரமாத்மா வைத்திருக்கும் பொதுவான கிருபையால்தான் இன்று வளமாய் வாழ்கின்றனர். ஆனால், உண்மை தெய்வத்தை பின்பற்றுபவர்களுக்கு வரும் செல்வப்பெருக்கு அவர்களுக்கு தீங்கு விளைவிக்காது என்பதுதான் நிதர்சனமான உண்மை.
கடவுளுக்கு பிசாசின்மீது முழு அதிகாரமுமுண்டு. ஆதாமை ஏமாற்றிய உடனேயே அவனை அழிக்க நினைத்திருந்தால் அழித்திருக்கலாம். ஆனால், எந்த மனுக்குலத்தை சாத்தான் ஏமாற்றினானோ, அந்த மனிதர்களை வைத்தே சாத்தானைப் புறக்கணித்து, அவனுடைய தந்திரங்களை உலகத்திற்கு வெளிச்சமாக்கி, மக்களை வைத்தே அவனை மனதார வெறுத்து, நியாயம் தீர்த்து, அழிக்க கடவுள் காத்திருக்கிறார். ஆதாமை ஏமாற்றிய உடனேயே சாத்தானை செயலிழக்கச் செய்வதால் கடவுளுக்கு கிடைக்கும் மகிமையைவிட, எல்லா மக்களும் சாத்தான் யார்? அவனுடைய திட்டம் என்ன? அவனுடைய குணம் என்னவென்பதை புரிந்துகொண்டு அவனை அடையாளம் கண்டு, முழுமனதோடு அவனை வெறுத்து, கடைசியாக அவனை நரகத்திற்கு அனுப்புவதன் மூலம் கிடைக்கும் மகிமை அதிகமாக இருக்கும்.
பெரும்பான்மையான இந்துக்களுக்கு ‘சாத்தான்’ என்று ஒரு சக்தி இருப்பது தெரியாது. அற்புதம் எங்கு நடந்தாலும் கடவுள்தான் செய்கிறார் என்று இந்துக்கள் நம்புகிறார்கள். காரணம், அவர்களுக்கு சாத்தானுக்கும் கடவுளுக்கும் வித்தியாசம் தெரியாது. கடவுள்தான் தன்னைப்பற்றி மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும். நான் இப்படி எல்லாம் எழுதினாலும் இயேசுவின் கொள்கைகளை முழுமையாகக் கடைபிடிப்போர் தங்கள் கிறிஸ்துவைப் போன்ற பண்பாட்டின் மூலம் இவ்வுலகில் தங்களுக்கும், பிறருக்கும் உள்ள வித்தியாசத்தை உருவாக்குவார்கள். எல்லா மக்களும் ஒருநாள் இயேசுவின் கொள்கைகளின் முக்கியத்துவத்தை உணர்வார்கள். இயேசுவை முழுமையாக அறிந்து பின்தொடரும் ஒரு விசுவாசிக்கு வரும் எந்த சூழ்நிலையிலும் ஒரு தெய்வீக அமைதியை அனுபவிப்பார். ஆனால், இறைவனை அறியாதவர்களுக்கு கோடிக்கணக்கில் பணம், அழகான வீடு, மனைவி, பிள்ளைகள் எல்லாம் இருந்தாலும், ஒரு பிரச்சனை வரும்போது, தாங்க முடியாமல் பலர் தற்கொலைகூட செய்து விடுகிறார்கள். மனஅமைதி என்பது சாந்திஸ்வரன் இயேசுவின் அமைதிக் கொள்கைகளின் முலம் கிடைக்கும் ஈவு. இன்று விளையாட்டு வீரர்கள், தொழிலதிபர்கள், திரைப்பட நடிகர்கள், அரசியல்வாதிகள் எத்தனை பேர் நிம்மதியாக வாழ்கின்றார்கள்? படிப்பு மனிதனுக்கு நிம்மதியைத் தருமானால், பேராசிரியர்கள் தற்கொலை செய்யவேண்டிய தேவையில்லையே. அழகு மனஅமைதியைத் தருமானால், நடிகைகள் தற்கொலை செய்ய வேண்டியதில்லையே! பணம் சமாதானத்தைத் தருமானால், தொழிலதிபர்கள் தற்கொலை செய்யவேண்டிய தேவையில்லையே. படிப்பு, பதவி, அதனால் உருவாகும் புகழ் எதுவும் நிரந்தரமல்ல. “நானே ஆண்டவர் வேறு எவருமில்லை. என்னையன்றி வேறு கடவுளில்லை. நீ என்னை அறியாதிருந்தும் உனக்கு வலிமை அளித்தேன்” (எசா. 45:5) என்று எல்லாம் வல்ல தெய்வம் தன்னை அறியாதவர்மீதும் அருள் பாலிப்பதைப் பார்க்கிறோம்.

60. எனக்கு வயதாகிவிட்டது !