098. என் மகனுக்கும் மகளுக்கும் திருமணம் தடைபடுகிறது. இயேசு தடைகளை அகற்றுவாரா ?

மனிதன் தனிமையாயிருப்பது நல்லதல்ல (ஆதி.2:18) என்று கூறிய தெய்வம், உங்கள் பிள்ளைகள் ஏற்ற துணைகளைப் பெற்று கொள்ள உதவுவார். பயப்படவேண்டாம் ஆனால், உங்களிடம் ஆண்டவர் முக்கியமாக ஒரு விஷயத்தை கூற ஆசைப்படுகிறார். அனைத்துக்கும் மேலாக இயேசுவையும் அவருக்கு விருப்பமானவற்றையும் தேடுங்கள். அப்போது இந்த ஆசீர்வாதங்கள் தானாக உங்களை வந்தடையும் (மத். 6:33). மனிதனால் முடியாதவைகள் கடவுளால் முடியும். ஆண்டவரை நம்புவோர் கைவிடப்படுவதில்லை. உங்கள் பிள்ளைகளுக்கு ஆண்டவர் கொடுக்கும் அருள்வாக்கைத் தருகிறேன்.
     ஆண்டவருக்கு அஞ்சி அவர் வழிகளில் நடப்போர் பேறுபெற்றோர். உம் இல்லத்தில் உம் துணைவியார் கனிதரும் திராட்சைக்கொடி போலிருப்பார். உண்ணும் இடத்தில் உம் பிள்ளைகள் ஒலிவக்கன்றுகள் போல் உம்மை சூழ்ந்திருப்பர். ஆண்டவருக்கு அஞ்சி நடக்கும் ஆடவர் இத்தகைய ஆசி பெற்றவராய் இருப்பர். நீர் உம் பிள்ளைகளின் பிள்ளைகளை காண்பீர் (தி.பா.128:1-6). நீங்கள் மனதுருகி ஜெபித்தால் மிகவிரைவில் அற்புதம் நடக்கும். நீங்கள் பலவருடங்களாக முயன்று நடக்காத அதிசயம் ஒரே மாதத்தில் நடக்கலாம். இறைவனுடைய அருளாசி உங்கள் பிள்ளைகளுக்கு உண்டாகட்டும்.

எனக்கு மூன்று மனைவிகள். இவர்களிடம் நான் மிகவும் அன்பாக இருக்கிறேன். நாங்கள் நான்குபேரும் இயேசுவை ஏற்றுக்கொள்ள விரும்புகிறோம். என் குடும்ப வாழ்வு இப்படியே மூன்று பேரோடு தொடரலாமா ?