Indian Christianity

இயேசு நாமக்காரர்கள்” நாங்கள்தான் உண்மையான கிறிஸ்தவர்கள்; வேறு யாரும் பரலோகம் போகமுடியாது” என்கிறார்கள். இவர்கள் அனைவரையும் பார்த்து “பாவிகள்” என்று ஏழாம்நாள்காரர்கள்” சொல்கிறார்கள். இவர்கள் ஒருவருமே சரி இல்லை என்று “மார்மன்கள்” அறிவித்துவிட்டார்கள். தங்களைத்தவிர வேறு எல்லாரும் நரகத்துக்குத்தான் போவார்கள் என்று புதிய எருசலேம்” சபையினர் முறைக்கிறார்கள். இவர்கள் ஒருவருடைய ” சபை பெயரும்” சரி இல்லை என்று கிறிஸ்துவின் சபையார் Tension ஆக இருக்கிறார்கள். இதில் ஒரு ஜாதிக்காரன் வேறொரு ஜாதிக்காரனை ஏற்றுக்கொள்ளமாட்டான்.
இப்படி யாரும் யாரையும் ஏற்றுக்கொள்ளாமல், மிருகங்களைப்போல கடித்து குதறுவதை பார்க்கும் மற்றவர்களில் பெரும்பாலானவர்கள் கடுப்பாகி கடவுளே இல்லை” என்னும் முடிவுக்கு வந்துவிட்டார்கள்.
கிறிஸ்தவர்கள் ஒன்றுசேராவிட்டால் இயேசு மட்டும்தான் கடவுள்” என்று பிறரால் ஒத்துக்கொள்ள முடியாது என்று இயேசுவே சொல்லிவிட்டார். யோவான் 17:21.
அன்பைப்பற்றி பேசும் நாம் இப்படி கேவலமாக பிரிந்துகிடக்கிறோமே; பிறர் நம்மை அசிங்கமாக பார்க்கிறார்களே என்னும் அடிப்படை சுரணைகூட ஊழியர்களுக்கு இல்லை. கடவுளின் இராஜ்ஜியத்தை கட்டுகிறோம் என்னும் தரிசனம் இருந்தால்தானே அந்த ஒற்றுமை ஏக்கம் வரும். இங்கு ஊழியர்கள் தங்கள் இராஜ்ஜியங்களை அல்லவா இயேசுவின் பெயரில் கட்டி எழுப்புகிறோம். ஞானஸ்நானத்தைப் பற்றி 4 மணி நேரம் வேதபாட வகுப்புகள் நடத்தும் போதகப்பிதாக்களுக்கு அன்பைப் பற்றி பேச 4 நிமிடம்கூட இல்லை. பானையில் இருந்தால்தானே அகப்பையில் வரும். நமது வேத அறிவும் ஆராய்ச்சியும் நம்மை நற்குணசாலிகளாக அல்லவா மாற்றியிருக்க வேண்டும். ஆனால், இவ்வளவு ஆண்டுகளாக பிரிவினைகளையும் கசப்பு வைராக்கியங்களையும்தானே உருவாக்கி இருக்கின்றன. கிறிஸ்தவத்தின் அடிப்படை மூலக்கூறே அன்புதானே! நமக்காக தன் உயிரையே கொடுத்த அந்த பாசமுள்ள நெஞ்சம் எதற்காக ஏங்குகிறது என்பது தெரிந்தால்தானே அவருடைய நோக்கங்களுக்கென்று வாழமுடியும்!