049) இன்று அதிகமாக அற்புதங்கள் நடக்கவில்லை. அதனால்தான் ஒடுக்கப்பட்டவர்கள் இன்று இயேசுவிடம் வரவில்லை.

பதில்: முதல் நூற்றாண்டில் ஒரே அருளுரையில் 3000 யூதர்கள் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டனர். ஆனால், திருத்தூதர்கள் பேசிய பேச்சை அவரவர் மொழியில் கேட்டதைத்தவிர அவர்கள் அங்கே பெரிய அற்புதங்கள் எதையும் பார்க்கவில்லை. அந்த யூதர்கள் அற்புதங்களைவிட இறைவனுடைய வார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுத்ததால், நாசரேத்தூர் இயேசுதான் அவர்கள் யுகங்களாக எதிர்பார்த்துக்கொண்டிருந்த மெசியா என்று எளிதில் புரிந்துகொண்டனர். எப்படியென்றால், கிறிஸ்துவைப் பற்றி திருச்சட்டத்தில் சொல்லப்பட்ட தீர்க்கதரிசனங்கள் இயேசுவின் வாழ்வில் எப்படி நிறைவேறின என்று திருத்தூதர் பேதுரு விளக்கிக்காட்டியபோது அவர்கள் இயேசுதான் கிறிஸ்து என்று ஏற்றுக்கொண்டனர். ஆனால், யூதரல்லாத புறவினத்தார் அற்புதங்களை உணராமல் ஏற்றுக்கொள்ளமாட்டர்கள் என்பதால் அவர்களுக்கு அதிக அதிசயங்களை கடவுள் நடப்பித்தார் (உரோ. 15:18).
நான் இயேசுவைப் பற்றிய தெளிவை அடைவதற்குமுன் என் தந்தையார் நோய்வாய்ப்பட்டு, மருத்துவரால் கைவிடப்பட்டு, மரணத் தருவாயில் இருக்கையில், ஒரு இறைஊழியர் வந்து அவருக்காக பிரார்த்தனை செய்தபோது அவர் முழுமையாகக் குணமடைந்தார். மனித சக்திக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தி உண்டு என்னும் பேரறிவு எனக்கு அதன்மூலம்தான் முழுமையாகக் கிடைத்தது. நான் திக்குவாய் உள்ளவனாக இருந்தேன். கடவுள் செய்த அற்புதத்தால் திக்குவாய் பிரச்சனையிலிருந்து முழுமையாக விடுதலையடைந்தேன். கடவுள் உண்டு என்னும் கொள்கையில் உறுதியற்று இருந்த எனக்கு இந்த சம்பவங்கள் உறுதியான திருப்புமுனைகளாக அமைந்தன. கிறிஸ்துவைப் பற்றி இன்னும் ஆழமாக தெளிவடைந்து, வேரூன்ற அந்த அற்புதங்களே காரணமாக இருந்தன.
துன்பவேளையில் என்னை கூப்பிடுங்கள்; உங்களை காத்திடுவேன். அப்போது நீங்கள் என்னை மேன்மைப்படுத்துவீர்கள் (தி.பா. 50:15), நன்றிப்பலி செலுத்துவோர் என்னை மேன்மைப்படுத்துவர் (தி.பா. 50:23) என்ற வசனங்களின்படி எங்கள் வாழ்வில் நடந்த அற்புதங்களின்மூலம் கடவுளின் பெயர் எங்கள் ஊரில் மாட்சிமை அடைந்தது. அது மறுக்கமுடியாத உண்மை. இதேபோல உலகமெங்கும் பலர் தங்கள் வாழ்க்கையில் கடவுள் செய்த அற்புதங்கள் மூலம் இயேசுவை தங்கள் மீட்பராக ஏற்றுக்கொண்டுள்ளனர். அதே சூத்திரப்படி, இன்று உலகமெங்குமுள்ள பல கிறிஸ்தவ ஆன்மீகவாதிகள் இயேசுவின் பெயரால் எப்படியாவது அற்புதங்களை நடத்திக் காட்டி பிறரைக் கிறிஸ்தவத்துக்கு இழுத்துவிடவேண்டும் என்று விரும்புகிறார்கள். குறிப்பாக, கடவுளால் மட்டுமே அற்புதங்களை செய்யமுடியும் என்று நிரூபிக்க முயல்கின்றனர். அற்புதங்களை அனுபவித்த பலர் கிறிஸ்து தரும் பாவமன்னிப்புக்காகத் தங்களை அற்பணித்தது உண்மையானாலும் பலருக்குள் அது பெரிய பண்பாட்டு மாற்றங்களை கொண்டுவராததால், அந்த அனுபவத்தை வெறும் மதப்பெயர் மாற்றமாகவே பிறர் கருதுகின்றனர். கிறிஸ்துவின் நோக்கமும் வெறும் மதப்பெயர் மாற்றமாகத்தான் இருந்ததா? இந்த கேள்விகளுக்கான பதிலை நுட்பமாக நாம் புரிந்துகொள்ளவேண்டும்.
கிறிஸ்து தன் உலகியல் வாழ்வில் தேவையில் இருந்தோருக்கு அற்புதங்களைச் செய்தார். கடவுள், நாசரேத்து இயேசுவின்மேல் தூய ஆவியாரின் வல்லமையைப் பொழிந்தருளினார். கடவுள் அவரோடு இருந்ததால் பிசாசின் கொடுமைக்கு உட்பட்டிருந்த அனைவரையும் அவர் விடுவித்து எங்கும் நன்மை செய்துகொண்டே சென்றார் (தி.ப. 10:38) என்று திருத்தூதர் பேதுரு கொர்நேலியுவின் வீட்டிலிருக்கும்போது கூறுகிறார். உடல் நலம் அற்றோருக்கு அவர் (கிறிஸ்து) செய்துவந்த அரும் அடையாளங்களைக் கண்டு மக்கள் பெருந்திரளாய் அவரைப் பின் தொடர்ந்தனர் (யோவா. 6:2) என்று திருத்தூதர் யோவான் கூறுகிறார்.
கடவுளால் மட்டும்தான் அற்புதம் நடக்குமா?
“நான் முன்பு வணங்கிவந்த கடவுள் எனக்கு அற்புதம் செய்யவில்லை; இயேசு அற்புதம் செய்தார்; எனவே, இயேசுவே கடவுள்” என்று பல இந்துக்களும் சொல்லி நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், கடவுளால் மட்டும்தான் அற்புதம் செய்ய முடியும் என்று பைபிள் கூறுகிறதா? கடவுளுடைய எதிர்சக்தியால் அற்புதம் செய்யமுடியாதா? கடவுள் அல்லாத சக்திகளாலும் அற்புதங்களை செய்ய முடிந்திருக்கிறதே! அற்புதங்கள் செய்யும் வலிமையுடைய எல்லாவற்றையும் கடவுள் என ஏற்றுக்கொள்ள பைபிள் நமக்குக் கற்பிக்கிறதா? இவை எல்லாவற்றையும் ஆராயவேண்டும்.
பார்வோனின் அரண்மனையில் நிஜமான கடவுளின் தீர்க்கதரிசி மோசே தன் கையில் வைத்திருந்த கோலைக் கீழே போட்டவுடனே அது பாம்பாக மாறியது. பார்வோனுடைய மந்திரவாதிகள் சற்றும் தாமதியாமல் அவர்களுடைய மந்திரக் கோல்களையும் கீழே போட்டனர். அவைகளும் பாம்புகளாக மாறின (விடு. 7:8-12) என்று மறைநூல் கூறுகிறதே! ஆக, அற்புதங்களைச் செய்யும் வலிமை உடைய எல்லாவற்றையும் கடவுள் என்று நாம் ஏற்றுக்கொள்ளமுடியாது என்பதை இந்த சம்பவங்கள் மூலம் துல்லியமாக அறிகிறோம்.
அவை அரும் அடையாளங்கள் புரியும் பேய்களின் ஆவிகள் (தி.வெ. 16:14) என்று மறைநூல் வெளிப்படுத்துகிறது. போலி மெசியாக்களும், போலி இறைவாக்கினர்களும் தோன்றி முடியுமானால் தேர்ந்து கொள்ளப்பட்டவர்களையே நெறிதவறச் செய்ய, பெரும் அடையாளங்களையும் அருஞ்செயல்களையும் செய்வார்கள் (மத். 24:24) என்று கிறிஸ்துவே கூறினார். மேற்கண்ட வசனங்களிலிருந்து பிசாசினாலேயே அற்புதங்களைச் செய்யமுடியும் என்று தெளிவாக அறிகிறோம்.
அற்புதங்களை செய்யும் எல்லாமே இறைசக்திதான் என்று ஏற்றுக் கொள்ள கிறிஸ்தவப் புனிதநூல் கற்பிக்கவில்லை. ‘ஒருவரே கடவுள்’ என்ற கொள்கையை கிறிஸ்தவர்களாகிய நாம் கற்றிருக்கிறோமே! கடவுள் அல்லாத சக்திகளாலும் அற்புதங்களை செய்யமுடியுமானால் உண்மையான கடவுளை அடையாளம் காண்பது எப்படி? கடவுளால் மட்டும்தான் அற்புதங்கள் செய்யமுடியும்; வேறு எந்த சக்தியாலும் அற்புதங்களைச் செய்யமுடியாது என்னுமளவுக்கு அந்நிய சக்திகளை அற்புதங்கள் செய்யவிடாமல் கடவுள் தடைசெய்திருக்கலாமே! கடவுளின் கட்டுப்பாட்டில்தானே சாத்தான் இருக்கிறான்! அவனை அற்புதம் செய்யாமல் தடுத்துவிட்டால் குழப்பமே இல்லாமல், இலகுவாக உலகினர் அனைவரும் இயேசுவை இரட்சகராக ஏற்றுக் கொள்வார்களே! எதற்கு இப்படி அவமானப்பட்டு, கொடுமைகளை அனுபவித்து பாவமன்னிப்புத் திட்டத்தை நாம் அறிவிக்கவேண்டும்?
ஒருமுறை நற்செய்தி அறிவிக்கும் ஒரு சகோதரரிடம் ஒரு இந்து சகோதரர், “ஐயா! இயேசு அற்புதங்கள் செய்வதால் அவரை நாங்கள் எங்கள் கடவுளாக ஏற்றுக்கொள்ள வலியுறுத்துகிறீர்கள். இதை நாங்கள் வரவேற்கிறோம். தாராளமாக உங்கள் கடவுளையும் எங்கள் கடவுளாக ஏற்றுக்கொள்கிறோம். நல்ல காரியங்கள் யார்மூலமாக நடந்தால் என்ன? நாடு நன்றாக இருக்கவேண்டும். ஆனால், உங்கள் கடவுள் அற்புதங்கள் செய்வதுபோல, எங்கள் கடவுளும் அற்புதங்கள் செய்கின்றது. உங்கள் கோயிலுக்கு மக்கள் கூட்டமாக விடுதலையைத் தேடி வந்து நலமாகி செல்வதுபோல, எங்கள் கோயில்களுக்கும் கூட்டமாக மக்கள் விடுதலையைத் தேடி வந்து நலமாகிச் செல்கிறார்களே சார்! அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற வெளிநாடுகளிலிருந்து பலரும் வந்து பயன் அடைகிறார்கள். எனவே, நாங்கள் உங்கள் கடவுளை ஏற்றுக் கொள்வதுபோல, நீங்கள் எங்கள் கடவுளையும் உங்கள் கடவுளாக ஏற்றுக்கொண்டு வணங்கமுடியுமா?” என்று சாந்தமாக கேட்டார். அவருடைய இடத்தில் நான் இருந்திருந்தால் நானும் அப்படித்தான் கேட்டிருப்பேன். இந்த கேள்வி என்னை மிகவும் சிந்திக்கவைத்தது.
மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் மரணமடைந்தபின் அவரது உடலை இறுதி அஞ்சலி செலுத்த, பொதுமக்களின் பார்வைக்கு பல மணி நேரம் வைத்திருந்தனர். ஊடகங்கள் மூலம் ஆயிரக்கணக்கான மக்கள் அந்த நேரலைக் காட்சிகளை பார்த்துக்கொண்டிருக்கும்போது ஒரு கிறிஸ்தவ ஊழியர் அந்த உடலின் அருகில் சென்று, “இயேசுவின் பெயரால் இந்த உடலுக்குள் உயிர் வரட்டும்!” என்று கட்டளையிட, அம்மையாரின் உடலில் உயிர்வந்து எழும்பி நடந்தால், உலகத்தின் ஒரு பெரும்பகுதி மக்கள் இயேசுவை மீட்பராக ஏற்றுக்கொண்டிருப்பார்களே! அன்று எலியாவை வைத்து அற்புதங்களை செய்த கடவுள் இன்று ஒரு ஊழியரை அனுப்பி அப்படி செய்வது கடினமான காரியமா? அப்படியெல்லாம் இன்று ஏன் கடவுள் செய்யவில்லை? லாசருவை உயிரோடு எழுப்பியவருக்கு அது கடினமான விடயமா? அவர் அப்படி செய்ய விரும்பவில்லையா? அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாத சர்வசக்தியுள்ள கடவுள் அல்லவா? என்றெல்லாம் நான் சிந்தித்திருக்கிறேன். அப்படி பிரமாண்டமான அற்புதங்களைக் கடவுள் செய்ய எது தடையாக இருக்கிறது? அப்படியே நடக்கும் அற்புதங்களையும் விளம்பரம் செய்யக் கடிமான சூழ்நிலைகளில் உள்ளவர்களுக்கு ஏன் செய்ய வேண்டும்? உலகின் ஏதோ ஒரு மூலையில் யாருக்கும் தெரியாத ஒரு ஆதிவாசி மனிதனுக்கு அற்புதம் செய்வதைவிட, மொத்த உலக மக்களும் பார்க்கும்வண்ணம் பல பிரமாண்டமான அற்புதங்களை பாராளுமன்றத்தில் கடவுள் இன்று செய்யமுடியாதா? இயேசு ஊனுடலில் வாழ்ந்த நாட்களில் மக்களுக்கு அற்புதங்களை செய்து விட்டு, “இதை யாருக்கும் சொல்லாதீர்கள்” என்று ஏன் சொன்னார்? என்றெல்லாம் சிந்தித்திருக்கிறேன்.
கிறிஸ்தவத்துக்கு எதிராக நிற்கும் இந்துத்துவ இயக்கங்களின் அரசியல் தலைமையில் இருக்கும் தற்போதைய பாரதப் பிரதமர் திரு நரேந்திரமோடி அவர்களையும், அவருடைய தொண்டர்கள் எல்லாரையும் ஆண்டவர் சவுலை சந்தித்ததுபோல அதிரடியாக ஒரே நாளில் சந்தித்தால் இந்தியாவில் ஒரு ஆன்மீக அதிர்வு உருவாகும் அல்லவா? கடவுள் பிரதமர் மோடி அவர்களுக்குத் திருக்காட்சியளித்து, “மோடி, ஏன் என்னைத் துன்புறுத்துகிறாய்?” என ஆண்டவர் சொல்ல, “ஆண்டவரே நீர் யார்?” என்று மோடி கேட்க, ஆண்டவர், “நான் நீ துன்புறுத்தும் கிறிஸ்தவர்கள் வணங்கும் கிறிஸ்து இயேசு. நானே உண்மையான கடவுளின் ஒற்றை அவதாரம் என்று நீயும் நம்பி, இன்னும் 24 மணி நேரத்தில் இந்தியாவின் எல்லா சமூக ஊடகங்களுக்கும் ‘இயேசுவே நிஜமான இரட்சகர்’ என்று நீ அறிக்கை விடுக்கவேண்டும்” என்று பிரதமர் மோடியிடம் நேரடியாக பேசலாமே! உடனே எல்லாத் தொலைக்காட்சியினரையும் பிரதமர் அவசரமாக அழைத்து, “கிறிஸ்தவர்கள் வணங்கும் இயேசு எனக்கு திருக்காட்சி தந்தார். அவர்தான் நிஜமான கடவுள் என்று கூறினார். எனவே, அவரைத்தான் நான் இனிமேல் வணங்கப்போகிறேன். நீங்களும் அவரைத்தான் வணங்கவேண்டும்” என்று அறிவிப்பு கொடுக்கவைக்கலாமே! அப்படி செய்யவைப்பது கடவுளுக்கு கடினமா? அது எல்லாம்வல்ல இறைவனுக்கு எளிதான விடயமானால் அப்படி ஏன் அவர் செய்யவில்லை?
உலக நாடுகளிலுள்ள அரசியல் தலைவர்கள், விஞ்ஞானிகள், தத்துவ மேதைகள், தொழிலதிபர்கள் எல்லோருக்கும் ஒரே நாளில் கடவுள் திருக்காட்சியளித்து, தன்னைத் தெளிவாக வெளிப்படுத்தி, நம்பச் செய்திருக்கலாமே! சண்டைகள், விவாதங்கள் எதுவுமின்றி கீழ்ப்படிந்திருப்பார்களே! அப்படிச் செய்தால், பெரும்பான்மையான இந்தியர்கள் இயேசுவைப் புரிந்துகொண்டு அவர் கொடுக்கும் இலவச மீட்பைப் பணவிரயமின்றி ஒரே நாளில் பெற்றுக்கொள்வார்களே! கடவுள் அப்படி மக்களை சந்தித்தால் இரத்தசாட்சியாக யாரும் இறக்கவேண்டிய தேவையில்லையே!
அற்புதங்கள் செய்வதைத் தவிர கிறிஸ்தவத்தில் வேறு சிறப்பு ஏதும் இல்லையா? வேறு என்ன செய்தால் கிறிஸ்து தரும் நித்திய ஜீவனை மக்கள் ஏற்றுக்கொள்வார்கள்? கிறிஸ்து இலவசமாக கொடுக்கும் முடிவில்லா வாழ்வு என்னும் வரப்பிரசாதத்தை மக்கள் ஏன் புறக்கணிக்கிறார்கள் என்ற கேள்விக்கு அன்றே நான் பதில் தேட ஆரம்பித்தேன்.
ஒருநாள் ஒருவர், “கர்த்தரை நம்புகிறவன் செழிப்பான்’ என்று கிறிஸ்தவர்கள் பரப்புரை செய்கிறீர்களே! நான் கர்த்தரை நம்பாமலேயே செழிப்பாக இருக்கிறேனே! ‘கர்த்தரை நம்புகிறவன் செழிப்பான்’ என்று கிறிஸ்துவை கடவுளாக வணங்காத அம்பானியிடம் சொல்வீர்களா? கிறிஸ்தவத்தில் இருக்கிறவர்கள் பலரும் குறிப்பாக பாஸ்டர்களே வறுமையில் வாழ்கிறார்களே!” என்று கேட்டார். இந்த சம்பவத்துக்குப்பின் நானே சிந்தித்தேன். “நீ இயேசுவை ஏற்றுக்கொண்டால் நீண்ட ஆயுளோடு வாழ்வாய்; உன் பிள்ளைகளின் பிள்ளைகளைக் காண்பாய்” என்று 95 ஆண்டுகள் உயிர்வாழ்ந்த கலைஞர் கருணாநிதியிடம் நாம் சொல்லியிருக்க முடியுமா? கடவுள் நம்பிக்கையே இல்லாத கலைஞருக்கு கடவுள் ஏன் நீண்ட ஆயுளை கொடுத்தார்? கடவுள் நம்பிக்கையற்றவர்களை முட்டாள்கள் (தி.பா. 14:1) என்று பைபிள் கூறினாலும் கலைஞர் உலக மக்கள் பார்வையில் புத்திசாலியாக, உலகியல் ரீதியான ஆசீர்வாதங்களோடு வாழ்ந்தாரே! பாஸ்டர்கள், பிஷப்புகளே பலர் கலைஞருடைய பாதுகாப்பு செட்டைகளுக்குள் தானே அடைக்கலம் புகுந்திருந்தனர். அவருடைய பிள்ளைகளின் பேரப்பிள்ளைகளையே அவர் பார்த்துவிட்டாரே! இயேசு கிறிஸ்துவின் ஊழியக்காரர்கள் பலரும் குழந்தை இல்லாமல் இருக்கிறார்களே!
“இயேசுவை ஏற்றுக்கொண்டால் நீ கையிட்டுச் செய்யும் வேலையை கடவுள் ஆசீர்வதிப்பார்” என்று பத்திரகாளி என்னும் விக்கிரகத்தை வணங்கும் சென்னை சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சியிடம் சொல்லமுடியுமா?; நிஜமான கடவுளைத் தொழாதவர்களும் செழிப்பாக இருக்கிறார்களே! “நீ கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக்கொண்டால் கீர்த்தியும் புகழ்ச்சியுமாக இருப்பாய்” என்று நடிகர்கள் கமலஹாசனிடமோ, ரஜினிகாந்திடமோ சொல்லமுடியுமா? அகிலாண்டத்தைப் படைத்த கடவுளின் ஊழியர்கள் பலரை அதே தெருவிலுள்ளோருக்கே தெரியவில்லையே!
இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில் தேடும்போது அந்த தேடல் இயேசு அனுபவித்த கோர மரணத்தின் அர்த்தமுள்ள நோக்கத்தை பற்றி ஆழமாக சிந்திக்க வைத்தது. கடவுள் இந்த உலகில் அடைய நினைப்பது பிறரால் மதமாற்றம் என்று நினைக்கப்படும் தொடக்கநிலை மீட்பு மட்டுமல்ல. அதற்கும்மேல் வேறொன்றை சாதிக்க விரும்பினார். அதுதான் தன் பிள்ளைகளுக்குள் அவர் அடைய விரும்பிய பண்பாட்டு மாற்றம் எனப் புரிந்துகொண்டேன்.
தன் பிள்ளைகள் தனக்காக உயிரையேக் கொடுக்குமளவுக்கு தன்மேல் அன்பு வைத்திருக்கிறார்கள் என்று நிரூபணம் ஆவதே அவருக்குக் கிடைக்கும் உச்சக்கட்ட மாட்சிமை என்றும் அந்த பண்பாட்டு மாற்றத்தின் பேரடையாளமான அன்புதான் எவரையும் கிறிஸ்துவின்பக்கம் திருப்பும் என்றும் நான் உறுதியாக நம்புகிறேன். ஆக, வெறும் அற்புதங்களை மட்டும் நடப்பிப்பதன்மூலமல்ல; நமது அன்பினால்தான் ஒடுக்கப்பட்டோர் உட்பட யாரையும் கிறிஸ்துவின் மீட்புக்குள் கொண்டுவர முயற்சி செய்வோம்.