079) நான் சாதியத்துக்கு எதிராக பேசினால் என்னை ‘தாழ்த்தப்பட்டவன்’ என்று என் சபையார் நினைத்துவிடுவார்கள். ஆகவே, *என் சுயமரியாதையின்* பொருட்டு நான் சாதியத்தை எதிர்த்து சபை மக்களுக்கு போதிக்கமுடியாமல் இருக்கிறேன்.

பதில்: “கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொண்டாலே நான் கீழ்ஜாதி ஆகிவிடுவேன் என்று என் பெற்றோர் என்னை தடுக்கிறார்கள்; ஏனெனில் பெரும்பான்மையாக தாழ்த்தப்பட்டவர்கள்தான் கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொள்கிறார்கள். எனவே, *எனது சுயமரியாதையின் பொருட்டு* கிறிஸ்தவத்தை தழுவ மறுக்கிறேன்” என்று ஒருவர் சொன்னால், அவருக்கு என்ன பதில் சொல்வீர்கள் பாஸ்டர்?
கிறிஸ்தவர்கள் என்றாலே கீழ்சாதி என்றுதான் இந்துக்கள் நினைக்கிறார்கள். அதனால் கிறிஸ்தவத்தை விட்டுவிட போகிறீர்களா பாஸ்டர்?
நீங்கள் கிறிஸ்துவின் மகிமைக்கென்று வாழ்கிறீர்களா அல்லது உங்கள் புகழ்ச்சிக்காக வாழ்கிறீர்களா? அவர் (இயேசு) பெருகவும் நான் சிறுகவும் வேண்டும் (யோவா. 3:30) என்ற நோக்கத்தோடு அல்லவா நாம் வாழவேண்டும்!
மோசே பெரியவரான பின்பு பார்வோனுடைய மகளின் மகன் என அழைக்கப்பட மறுத்தது, பாவத்தில் சிறிது காலம் இன்புறுவதைவிட, கடவுளுடைய மக்களோடு சேர்ந்து துன்புறுவதையே அவர் தேர்ந்து கொண்டார். ஏனெனில், தமக்கு கிடைக்கவிருந்த கைம்மாறு ஒன்றையே கண்முன் இருத்தி, அவர் எகிப்தின் செல்வங்களைவிட, “மெசியாவின்” பொருட்டு இகழ்ச்சியுறுவதே மேலான செல்வம் என்று கருதினார் (எபிரேயர் 11:24-26).
மோசே நினைத்திருந்தால் பார்வோனுடைய மகன் என்ற உயர்ந்த அந்தஸ்தில் அமர்ந்து சுகபோகமாக வாழ்ந்திருக்கலாமே! எதற்காக எபிரேய அடிமைகளோடு அடிமையைப் போல வாழ தன்னை அற்பணிக்கவேண்டும்?