089) பள்ளி சான்றிதழில் சாதி குறிப்பிடவேண்டும் என்று அரசாங்கமே கட்டாயப்படுத்துகிறதே!

பதில்: பள்ளிச் சான்றிதழில் சாதி என்ற கட்டம் உள்ளது. அது சாதி அடிப்படையில் இடஒதுக்கீடு வாங்க நினைப்போருக்கு மட்டும் உரியது. அதில் சாதியை குறிப்பிடுவது கட்டாயம் அல்ல என்று 1973-லேயே தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இதைப் பற்றிய விழிப்புணர்வு உங்களுக்கு இன்னும் வந்துசேரவில்லை என்று நினைக்கிறேன். *”சாதியின் அடிப்படையில் எனக்கு எதுவும் தேவையில்லை”* என்போர் அந்த இடத்தை காலியாக விடலாம். அவர்கள் தொடர்ந்து சாதி சான்றிதழ் கேட்டால், “சாதியின் அடிப்படையில் எங்களுக்கு எந்த இடஒதுக்கீடும் தேவை இல்லை” என்று ஒரு மனு கொடுத்துவிடுங்கள். அவர்கள் அதன்பின் சாதி சான்றிதழ் கேட்கமாட்டார்கள்.
நாங்கள் எங்கள் பிள்ளைகளை பள்ளியில் சேர்க்கும்போது சாதிச் சான்றிதழ் கொடுக்காமலேயே சேர்த்திருக்கிறோம். பள்ளி நிர்வாகத்தினர் ஏற்றுக்கொண்டனர்.
இன்று இந்தியாவில் வாழும் இஸ்லாமியர்கள் எல்லாருடைய மூதாதையர்கள் முன்பு இந்துக்களாகத்தான் இருந்தனர். ஏதோ காரணங்களுக்காக இந்துத்துவத்திலிருந்து இஸ்லாத்துக்கு நகர்ந்தனர். இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட அவர்களிடம் பள்ளியில், “நீங்கள் என்ன சாதி?” என்று கேட்கும்போது அவர்கள் விட்டுவந்த இந்துத்துவ சாதியின் பெயரை சொல்வதில்லை. ஏனென்றால், இஸ்லாம் இந்துத்துவ சாதியத்தை மறுக்கிறது. *அவர்கள் சாதி பெயர்களைச் சொல்ல மறுத்ததால், அரசு சாதிப் பெயர்களை கேட்பதையே விட்டுவிட்டது.* அதுபோல, நாம் சாதி பெயர்களை சொல்ல மறுத்தால் அரசாங்கம் சாதியைக் கேட்பதை நிறுத்திவிடும் என்பதே நிதர்சனமான உண்மை.
அரசாங்கம் மதுபானத்தை (TASMAC) விற்பனை செய்கிறது என்பதற்காக *நீங்கள் கண்டிப்பாக மதுபானம் அருந்தித்தான் ஆகவேண்டும்* என்று அரசு கட்டாயப்படுத்துகிறதா? *ஓரினச்சேர்க்கை* இந்திய அரசால் சட்டபூர்வமாக்கப்பட்டுள்ளதால் கிறிஸ்தவர்கள் நாம் அதில் ஈடுபடுவோமா?
இந்துத்துவ சாதியத்துக்கும் கிறிஸ்தவர்களுக்கும் சம்பந்தமில்லை. இந்துத்துவம் தேவை இல்லை என்று புறக்கணித்து வந்த கிறிஸ்தவர்களிடம் அரசு, _”நீங்கள் என்ன சாதி?”_ என்று கேட்பதே தவறு. சாதி என்ற இடத்தில், *’சாதியற்றவர்’* என்றோ, *’இந்திய கிறிஸ்தவர்’* என்றோ எழுதுங்கள்.
கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கத்தினர் 10,000 பேர் முதல்வரைப் பார்த்து, *’சாதியற்றோர்’* என்ற சான்றிதழை தடையில்லாமல் கொடுக்கவும், சாதியற்றவர்களுக்கென்று தனி இடஒதுக்கீட்டையும் கேட்கப்போகிறோம். நீங்களும் எங்களோடு இணையுங்கள். நன்றி.