015. இயேசு சீக்கிரம் வருகிறார் என்று பல்லாண்டுகளாகக் கூறுகிறீர்கள். இன்னும் வரவில்லையே !

     இதோ, நான் வருகிறேன். அவரவர் செயலுக்கேற்ப அவரவருக்கு நான் அளிக்கவிருக்கின்ற கைமாறு என்னிடமுள்ளது (தி.வெ.22:12) என்று இயேசு கூறினார். அவர் விரைவில் வருவேன் என்று கூறினாலும், எப்போது என்று நாள் குறிப்பிட்டு கூறவில்லை. இன்னும் தெளிவாக கூறினால், அவர் எப்போது திரும்ப வருவார் என்று ஒருமுறை இயேசுவின் சீடர்கள் கேட்டபோது, “அந்நாள் தந்தை ஒருவருக்கே தெரியும்” என்று கூறினார் (மாற்.13:32). சுனாமி என்ற ஆழிப்பேரலைகளால் தமிழகத்துக்கு சேதம்வரும் என்று 2004-க்கு முன் ஒரு சமுதாய விழிப்புணர்வு பணியாளர் தமிழக கடற்கரை சந்து பொந்துகளெல்லாம் நுழைந்து கூவிக்கொண்டே சென்றால் மக்கள் அவரை, ‘இவன் பைத்தியக்காரன்’ என்று எள்ளி நகையாடுவார்கள்; அல்லவா? அதுபோலவே இயேசுவின் இரண்டாம் வருகையும் பலரால் கிண்டலாக நினைக்கப்படுகிறது. மனிதன் தன்னைப் படைத்த கடவுளோடு இணைய வேண்டுமென்று கடவுள் காலம் தாழ்த்துகிறார் என்பதை விளக்கும் வேதபகுதியை கீழே வாசியுங்கள்.

     இறுதிக் காலத்தில் ஏளனம் செய்வோர் சிலர் தோன்றித் தங்கள் சொந்த தீய நாட்டங்களுக்கேற்ப வாழ்ந்து உங்களை எள்ளிநகையாடுவர். அவர்கள், “அவரது வருகையைப் பற்றிய வாக்குறுதி என்னவாயிற்று? நம் தந்தையரும் இறந்து போயினர் ஆயினும் படைப்பின் தொடக்கத்தில் இருந்ததுபோல எல்லாம் அப்படியே இருக்கிறதே” என்று சொல்லுவார்கள். அன்பார்ந்தவர்களே, நீங்கள் ஒன்றை மறந்துவிட வேண்டாம். ஆண்டவரின் பார்வையில் ஒருநாள் ஆயிரம் ஆண்டுகள் போலவும், ஆயிரம் ஆண்டுகள் ஒருநாள் போலவும் இருக்கின்றன. ஆனால், அவர் அவ்வாறு காலம் தாழ்த்துவதில்லை, ஆண்டவர் தம் வாக்குறுதியை நிறைவேற்றக் காலம் தாழ்த்துவதாக சிலர் நினைக்கின்றனர். மாறாக உங்களுக்காக பொறுமையோடு இருக்கிறார். யாரும் அழிந்து போகாமல் எல்லாரும் மனம்மாற வேண்டுமென விரும்புகிறார் (2பேது.3:8-9).

     இவ்வுலகிலுள்ள எல்லா மனிதரும் ஆண்டவருடைய நற்செய்தியை ஏற்றுக்கொள்ள ஆண்டவர் பொறுமையோடு காத்திருக்கிறார். எல்லா மனிதரும் மீட்புப்பெறவும் உண்மையை அறிந்துணரவும் வேண்டுமென அவர் விரும்புகிறார் (1திமொ.2:4) என்று வேதம் கூறுகிறது. இதை விளக்க இயேசு ஒரு உவமையை தன் சீடர்களுக்கு கூறினார். ஒருவர் தம் திராட்சை தோட்டத்தில் அத்திமரம் ஒன்றை நட்டு வைத்திருந்தார். அவர் வந்து அதில் கனியைத் தேடியபோது எதையும் காணவில்லை. எனவே அவர் தோட்டத் தொழிலாளரிடம், “பாரும், மூன்று ஆண்டுகளாக இந்த அத்தி மரத்தில் கனியை தேடி வருகிறேன். எதையும் காணவில்லை. ஆகவே இதை வெட்டிவிடும். இடத்தை ஏன் அடைத்துக் கொண்டிருக்க வேண்டும்?’ என்றார். தொழிலாளர் மறுமொழியாக, ‘ஐயா, இந்த ஆண்டும் இதை விட்டுவையும். நான் இதைச் சுற்றிலும் கொத்தி எரு போடுவேன், அடுத்த ஆண்டு கனி கொடுத்தால் சரி. இல்லையானால், இதை வெட்டி விடலாம்’ என்று அவரிடம் கூறினார் (லூக்.3:6-9).

     விண்ணரசைப் பற்றிய இந்நற்செய்தி எல்லா மக்களினத்தாரும் ஏற்றுக்கொள்ளுமாறு உலகமெங்கும் அறிவிக்கப்படும் அப்போது முடிவு வரும் (மத்.24:14) என்று வேதம் தெளிவூட்டுகிறது. கிறிஸ்து வரும் வேளை நமக்குத் தெரியாததால் எப்போதும் நாம் விழிப்பாயிருக்க அவர் அறுவுறுத்துகிறார் (மத்.24:42). இயேசு திரும்ப வருவதற்கு சற்று முன்னுள்ள நாட்களில் என்ன நடக்கும் என்று 2திமொ. 3 ஆம் அதிகாரத்தில் கூறப்பட்டிருப்பதை வாசித்து விழிப்பாயிருங்கள். இதோ! நான் விரைவில் வருகிறேன் இந்நூலில் உள்ள இறைவாக்குகளைக் கடைப்பிடிப்போர் பேறுபெற்றோர் (தி.வெ. 22:7) என்று கூறினார். ஆற்றுத் தண்ணீர் போல் அநியாயங்கள் மலிந்துபோன இந்த உலகின் மக்கள் மனம்மாறி அன்புள்ளவர்களாக மாறவேண்டும் என்பதற்காக அந்த கருணாமூர்த்தி காத்திருக்கிறார் என்பதை நாம் உணர வேண்டும்.
நீ கற்றதையும் கேட்டதையும் நினைவில் கொள்; அவற்றைக் கடைப்பிடி; மனம் மாறு; நீ விழிப்பாயிரு. இல்லையேல் நான் திருடன் வருவதுபோல வருவேன். நான் எந்த நேரத்தில் உன்னிடம் வருவேன் என்பதை நீ அறியாய் (தி.வெ. 3:3). திருடன் இரவில் வருவதுபோல ஆண்டவருடைய நாள் வரும் (1தெச. 5:2). ஆயத்தமாயிருப்போம். மறைவானவை நம் கடவுளாகிய ஆண்டவருக்கு உரியவை. வெளிப்படுத்தப்பட்டவையோ, இத்திருச்சட்டத்தின் வார்த்தைகளைக் கடைப்பிடிக்குமாறு, நமக்கும் நம் பிள்ளைகளுக்கும் என்றென்றைக்கும் உரியவை (இ.ச. 29:29).

அமெரிக்கா ஒரு கிறிஸ்தவ நாடு. அங்குள்ளவரெல்லாரும் யோக்கியரா ?