014. இயேசு கன்னியின் வயிற்றில் எப்படி பிறக்க முடியும்? இது விஞ்ஞான பூர்வமாக சாத்தியமா ?

இறைவன் மண்ணிலிருந்து மனிதனைப் படைத்தார் (தொ.நூ. 2:7). அவனுடைய விலாவிலிருந்து பெண்ணை உருவாக்கினார் (தொ.நூ. 2:21,22); இந்த உலகத்தையும் அதில் உள்ளவற்றையும் வார்த்தையால் படைத்தார் (தொ.நூ.1); செங்கடலை இரண்டாக பிளந்து தம் மக்களுக்கு வெட்டாந்தரைபோல் நடக்க வழி கொடுத்தார் (வி.ப. 14); ஐந்து அப்பத்தையும் இரண்டு மீன்களையும் வைத்து ஐந்தாயிரம் பேருக்கு பசியாற்றினார் (மாற்.6); தண்ணீரை திராட்சை ரசமாக்கினார் (யோவா. 2:1-11); செத்த பிணங்களை உயிரோடு எழுப்பினார் (1அர. 17:17-24, 2அர. 4:32-37); இரும்பைத் தண்ணீரில் மிதக்கப் பண்ணினார் (2அர. 6); எலும்புக் கூட்டத்தைப் படைவீரர்களாய் மாற்றினார் (எசே. 37); கடலின்மீது தரையைப்போல நடந்தார் (யோவா.6:19); குருடர்களை பார்க்க வைத்தார்; செவிடர்களைக் கேட்கவைத்தார் (லூக்.7); தொழுநோயாளிகளைக் குணப்படுத்தினார் (2அர. 5:1-14); மலடிகளை பிள்ளைத் தாய்ச்சி ஆக்கினார் (2அர. 4:12-17). இவை எல்லாம் விஞ்ஞான பூர்வமாக சாத்தியமா? இந்த மகா அதிசய தெய்வத்திற்கு, ஒரு கன்னியின் வயிற்றிலே இயேசுவை பிறக்கவைப்பது சாத்தியமற்றதா?

நான் முதல் தடவை விமானத்தில் பயணம் செய்தபோது ஜன்னல் வழியே வெளியே பார்த்துக்கொண்டிருந்தேன். அழகான வெண்ணிற மேகங்கள் விமானத்திற்குக் கீழே தெரிந்தன. அதுவரை வானத்து மேகங்களை அண்ணாந்து பார்த்த எனக்கு இது ஆச்சரியமாய் இருந்தது. ஆனால், பல்லாண்டுகளாய் விமானம் ஓட்டும் அந்த விமானிக்கு இது கொஞ்சமும் புதிரானதல்ல. அதுபோல, ஆண்டவர் செய்யும் அற்புதங்களை உங்களுடைய வாழ்வில் ருசிக்க தொடங்கினால் இயேசுவின் பிறப்பை நம்புவது கடினமாயிருக்காது. ஒரு தாயின் வயிற்றில் எலும்பு உருவாவது இன்னும் விஞ்ஞானிகளுக்கு புதிராகத்தான் உள்ளது. நீங்கள் அதை முழுவதும் அறிந்தபின்தான் நம்புவீர்களானால் திராட்சைசெடி, எலுமிச்சைசெடி, ஆப்பிள்செடி, ஆரஞ்சுசெடி. எல்லாவற்றின் மேலும் ஒரே சுவையான மழைநீர் விழுந்தாலும் பழத்தின் சுவை வேறுபடுவது ஏனென்று சிந்தித்தீர்களா? அந்த விஞ்ஞான உண்மையை அறிந்தால்தான் நான் திராட்சைப் பழத்தை உண்பேனென்று கூறமுடியுமா? இயேசு ஒரு கன்னியின் வயிற்றில் பிறப்பாரென்று இறைவாக்கினர்கள் ஏற்கனவே முன்னுரைத்தனர் (எசா. 7:14). அதன்படியே நடந்தது (மத். 1:18-25).

இயேசு சீக்கிரம் வருகிறார் என்று பல்லாண்டுகளாகக் கூறுகிறீர்கள். இன்னும் வரவில்லையே !